யாழில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு மோடியை யாரும் நெருங்கவில்லை: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் அவரை நெருங்கியதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14-ந் தேதியன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை தமிழர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் தமது காரில் ஏறுவதற்காக மேடையின் பின்புறமாக மோடி வந்த போது பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கினார். ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரை தடுத்து நிறுத்தி இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி பின்னர் இலங்கை போலீசார் விடுவித்தனர். இத்தகவலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் உறுதி செய்திருந்தனர்.
ஆனால் இதனை மறுத்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், எந்த ஒரு நபரும் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு மோடியை நெருங்கவில்லை. பிரதமர் மோடி யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கான ஏராளமான வீடியோ பதிவுகள் இருக்கின்றன. அதை பார்த்து தங்களது சந்தேகங்களை உறுதி செய்து கொள்ளலாம் என்றார்.