சசிகலா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை: கர்நாடக புலனாய்வு துறை
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா உயிருக்கு ஆபத்து இல்லை என்று கர்நாடக புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
பெங்களூர்: பெங்களூர் சிறையிலஅடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கர்நாடக உளவுத்துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவர்கள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் சிலர் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாயின.
சசிகலா பாதுகாப்பு குறித்து கர்நாடக புலனாய்வு துறை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் சசிகலா உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் கைதிகளிடம் இருந்து அவருக்கு இடையூறு எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சிறைத்துறை அதிகாரிகளும் சசிகலாவின் பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் சசிகலாவிடம் இருந்து புகார் எதுவும் இதுவரை பெறப்படவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வேளை சசிகலா சட்ட ஆலோசகர்களை சந்தித்து , சென்னை சிறைக்கு தன்னை மாற்ற நீதிமன்றம் சென்றால் அதனை கர்நாடக அரசு எதிர்க்கும் என்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தாலும் , கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று விளக்கம் அளிப்பதோடு மட்டுமில்லாமல் சசிகலா தரப்பில் உண்யிமையில்லை என்று நிரூபிக்கும் என்றும் கூறியுள்ளனர்.