மேகதாது விவகாரத்தில் கன்னட அமைப்புகளிடையே பிளவு..கடைகளை திறக்க ஒரு குரூப் ஆதரவு!
பெங்களூரு: மேகதாது விவகாரத்திற்காக கர்நாடகாவில் நடைபெறும் பந்த்துக்கு வட கர்நாடகாவில் ஆதரவு கிடைக்கவில்லை. ஹூப்ளி உள்ளிட்ட வட கர்நாடக நகரங்களில் கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் கன்னட அமைப்பினர்.
கன்னட அமைப்புகள் பொதுவாக, காவிரி விவகாரத்திலும், தமிழர்களுக்கு எதிராகவுமே மிகவும் உக்கிரமாக செயல்படுவதாக வட கர்நாடக மக்களிடம் அதிருப்தியுள்ளது. ஆந்திராவுடனான கிருஷ்ணாநதி நீர், கோவாவுடனான மகதாயி நதி நீர், மகாராஷ்டிராவுடனான எல்லை பிரச்சினை போன்றவற்றில் கர்நாடக ரக்ஷனா வேதிகே, வாட்டாள் கட்சி போன்றவை போராட்டம் நடத்துவதில்லை என்ற ஆதங்கம் ஹூப்ளி, பெல்லாரி, பெல்காம், குல்பர்கா போன்ற வட கர்நாடக பகுதி மக்களிடம் உள்ளது.
எனவே, காவிரி நதி தொடர்பாக இன்று நடைபெறும் கர்நாடகா பந்த்திற்கு வட கர்நாடக மக்கள் ஆதரவு தரவில்லை. கன்னட அமைப்புகள் கூட இரண்டாக பிளவுபட்டுள்ளன. பெங்களூரில் உக்கிரமாக போராடிவரும் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின், ஹூப்ளி நிர்வாகிகளோ, நேர் எதிராக செயல்படுகின்றனர். ஹூப்ளியில் கடைகளை திறந்து வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Procession started from Town hall, Police corner, Mysore bank circle, Palace road, Maharani circle to Freedom park. pic.twitter.com/4JQeBU8oCY
— Traffline Bengaluru (@TrafflineBLORE) April 18, 2015
வட கர்நாடக பிரச்சினைக்கு போராட முன்வராத கன்னட அமைப்பினருக்காக, நாம் ஏன் கடைகளை மூடி வியாபாரத்தை கெடுக்க வேண்டும் என்று அந்த கன்னட அமைப்பு நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இது கன்னட அமைப்பின் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கர்நாடக விவகாரங்களுக்காகவும், நாங்கள் போராடித்தான் வருகிறோம் என்று கன்னட அமைப்பின் தலைவர்கள் வாட்டாள் நாகராஜ், பிரவீன் ஷெட்டி போன்றோர் பேட்டியளித்துள்ளனர்.