இந்தியப் பெருங்கடலில் சீனாவின் 18 கடற்படை தளங்கள்- 'திடுக்' தகவல்
டெல்லி: இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் தென்பகுதியில் இந்தியாவை சுற்றி மொத்தம் 18 கடற்படை தளங்களை சீனா அமைத்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது,
சீனா பல ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வரும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் 'முத்துமாலை' திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது.
இதனடிப்படையில் இந்தியாவை சுற்றிய நாடுகளில் உள்ள துறைமுகங்களை சீரமைத்துக் கொடுத்து அங்கே தமது கடற்படை தளங்களை அமைத்துள்ளது சீனா.
இந்த நிலையில் நமீபியாவின் பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று நடத்திய ரகசிய ஆய்வில், இந்திய பெருங்கடலில் சீனா கடற்படை தளங்கள் உள்ளிட்ட பணிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. ஆனால் நீர்மூழ்கி கப்பல்கள் ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு செல்லும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் சீனா விளக்கம் அளித்தது.
தற்போது இந்தியாவை சுற்றி இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் தென்பகுதியில் சீனா மொத்தம் 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், ஏமன், ஓமன், கென்யா, தான்சானியா, மொசாம்பிக், செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த கடற்படை தளங்களை சீனா அமைத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது.
ஆனால் இந்திய பெருங்கடலில் சீனா கடற்படை தளங்களை அமைத்து வருவது தொடர்பான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது என அந்நாட்டு தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜெங்யான்சீன் மறுப்பு தெரிவித்துள்ளார்,