காஷ்மீர் எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதை "ரிட்டர்ன்" செய்தார்!
ஸ்ரீநகர்: சாகித்ய அகாடமி விருது திரும்பத் தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இன்று காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான குலாம் நபி காயல் தனது விருதைத் திரும்பத் தருவதாக அறிவித்தார்.
நாட்டில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை. மிரட்டப்படுகிறார்கள். அச்ச உணர்வுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே எனது விருதைத் திரும்பத் தருகிறேன் என்று குலாம் காயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது விருதைத் திரும்பத் தருகிறேன். நாட்டில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மிரட்டப்டபுவதாக உணர்கிறார்கள்.அச்ச உணர்வுடன் வாழும் நிலை உள்ளது. தங்களது எதிர்காலம் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள் என்றார் அவர்.
1975ம் ஆண்டு தனது காஸிக் மினார் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் காயல். விரைவில் எனது விருதையும், ரொக்கப் பரிசையும், பட்டயத்தையும் நான் திருப்பி அனுப்பி விடுவேன் என்றும் காயல் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுபான்மையினரை காக்க வேண்டியது அரசின் கடமை. அதிலிருந்து அது தவறி விட்டது. இதுபோன்ற செயல்களை நான் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. எனவேதான் விருதைத் திரும்பத் தர முடிவு செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களது விருதைத் திரும்பித் தந்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் தனது விருதைத் திரும்பத் தருவது இதுவே முதல் முறையாகும்.