'லவ் ஜிகாத்' எல்லாம் இல்லை, நான் தான் ஓடிப் போனேன்: மீரட் பெண் திடீர் பல்டி
மீரட்: தன்னை கடத்தி, பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாறச் செய்ய வைத்ததாக கூறிய 20 வயது பெண் தற்போது பல்டி அடித்து தானாக தான் முஸ்லீம் காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 20 வயது பெண் தான் கடத்தப்பட்டு, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். இதனால் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பும், பிரச்சனையும் ஏற்பட்டது. இதையடுத்து முஸ்லீம் வாலிபர்கள் இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதமாற வைப்பதாக யோகி ஆதித்யநாத் உள்ளிட பல பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அந்த பெண் தற்போது புதிய வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
முஸ்லீம்
நான் முஸ்லீம் வாலிபரை காதலிப்பது என் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் நான் விரும்பியே எனது காதலருடன் வீட்டைவிட்டு வெளியேறினேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தார்
நான் முஸ்லீம் வாலிபருடன் சென்றதை ஏற்காத எனது குடும்பத்தார் தான் லவ் ஜிகாத் என்று கதைகட்டிவிட்டனர். மேலும் தற்போது என் கருவையும் கலைக்குமாறு வற்புறுத்துகிறார்கள் என்றார் அவர்.
கொலை முயற்சி
என் குடும்பத்தாரே என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நான் இறந்தால் அரசிடம் இழப்பீடு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் என்றார் அந்த பெண்.
காவல் நிலையம்
ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்திற்கு வந்த அந்த பெண் தனது குடும்பத்தாரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்புக்கு காப்பகத்தில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
யோகி ஆதித்யநாத்
பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணே இது கட்டுக்கதை என்று தெரிவித்தும் இது லவ் ஜிகாத் அதாவது காதல் என்ற பெயரில் பெண்களை இஸ்லாத்திற்கு மாற்றும் முயற்சி தான் என்று பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.