மும்பையில் முஸ்லீம் என்பதால் இளம்பெண்ணை வீ்ட்டை காலி செய்ய வைப்பு
மும்பை: மும்பையில் குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முஸ்லீம் என்பதால் அவரை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா காத்ரி(25). அவர் மும்பை வாதாலா பகுதியில் உள்ள சங்வி ஹைட்ஸ் அபார்ட்மென்டிஸில் வீடு வாடகைக்கு எடுக்க நினைத்து புரோக்கரை அணுகினார். புரோக்கர் மூலம் அவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவர் முஸ்லீம் என்பதால் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மிஸ்பா கூறுகையில்,
நீங்கள் முஸ்லீம் என்பதால் வீடு வாடகைக்கு கிடைக்காது என்று புரோக்கர் என்னிடம் தெரிவித்தார். இது குஜராத்தில் தான் நடக்கிறது என்றால் மும்பையிலும் நடக்கிறது. நான் ஒரு முஸ்லீம் என்பதால் ஏதாவது பிரச்சனைகளை சந்தித்தால் அதற்கு புரோக்கரோ, அபார்ட்மென்ட் நிர்வாகமோ பொறுப்பில்லை என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு புரோக்கர் தெரிவித்தார்.
அதில் நான் கையெழுத்திட மறுத்த உடன் என்னை வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து நான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜெஷான் அலி கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி முஸ்லீம் என்பதால் மும்பையைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனம் அவருக்கு வேலை அளிக்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.