இந்தியா 350 அடின்னா நாங்க 400 அடி... எல்லையில் பறக்கும் ஏட்டிக்குப் போட்டி கொடிகள்
இந்தியா 350 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டால் பாகிஸ்தானின் தேசிய கொடி 400 அடி உயரத்தில் பறக்கும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் ராணுவம், கம்பம் அமைக்கும் வேலையை தீவிரமாக்கியுள்ளது.
வாஹா : இந்தியா 350 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டால் பாகிஸ்தானின் தேசிய கொடி 400 அடி உயரத்தில் பறக்கும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் 400 அடி உயரத்தில் கம்பம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி மிக உயரமான தேசிய கொடியை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டரி பகுதியில் இந்தியா நிறுவியுள்ளது. இதன் உயரம் 350 அடியாகும். இதற்கு போட்டியாக, 400 அடி உயர கம்பத்தில் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏற்ற திட்டமிட்டுள்ளது பாகிஸ்தான்.
பனிமலையில் வீசும் காற்றின் வேகம் காரணமாக இந்திய தேசியக் கொடி அடிக்கடி சேதமடைகிறது. இந்த உயரமான கொடி கம்பத்தில், சேதமடையாத வகையில் கொடியை ஏற்ற இந்தியா போராடி வருகிறது.
இந்தியாவின் தேசிய கொடி நிறுவப்பட்ட 2 நாட்களிலேயே வேகமான காற்றால் கொடி கிழிந்து சேதமடைந்தது. பின்னர் அந்தக் கொடி மாற்றப்பட்டு, மீண்டும் ஏற்றப்பட்டது. இதே போல இதுவரை 5 முறை கொடி மாற்றப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக மூவர்ணக்கொடி இல்லாமலேயே இந்தக் கொடி கம்பம் இருந்து வருகிறது.
இந்த உயரமான கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி, பாகிஸ்தானின் லாகூரில் இருந்து பார்த்தாலும் தெரியும் என்பது இதன் சிறப்பம்சமாக தகவல்கள் வெளியாகி பாகிஸ்தான் ராணுவத்தைக் கலங்கடித்தது.
இந்நிலையில், இந்திய கொடியை விட உயரமாக, 400 அடி உயரமுள்ள தேசிய கொடியை வாஹா எல்லையில் ஏற்ற உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கான வேலைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.