ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக என்.எஸ்.விஸ்வநாதன் நியமனம்
டெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக என்.எஸ்.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நியமிப்பதற்கான ஒப்புதலை நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இன்று வழங்கியது.
மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த ஹெச்.ஆர்.கானின் பதவி காலம் வரும் ஜூலை 3-ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய துணை ஆளுநராக என்.எஸ்.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பாக மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக என்.எஸ்.விஸ்வநாதன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின், வங்கிகள் அல்லாத துறையின் மேற்பார்வை முதன்மை தலைமை பொது மேலாளராக இருந்துள்ளார்.
பஞ்சாப் தேசிய வங்கியின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். இதனிடையே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வரும் செப்டம்பரில் நிறைவடையவுள்ளது. இதையொட்டி புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.