ராஜபக்சேவை எதிர்க்கும் மைத்ரிபாலவை கொழும்பில் சந்திக்கிறார் தே.பா. ஆலோசகர் அஜித் தோவல்!
டெல்லி / கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திக்க இருக்கிறார்.
இலங்கையில் திங்கள்கிழமையன்று கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் அஜித் தோவல் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கருத்தரங்குக்கு செல்லும் அஜித் தோவல், இலங்கை அதிபர் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இலங்கை கடற்பரப்பில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த இந்தியாவின் ஆட்சேபனையை அஜித் தோவல் தெரிவிக்க இருக்கிறார்.
அத்துடன் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவையும் அஜித் தோவல் சந்தித்து பேசுகிறார். மேலும் 9 ஆண்டுகால வனவாசத்துக்குப் பிறகு தீவிர அரசியலில் குதித்துள்ள முன்னாள் அதிபர் சந்திரிகாவையும் அவர் சந்திக்க இருக்கிறார்.
மைத்ரிபால சிறிசேனாவுக்கு பின்புலமாக இந்தியா இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அஜித் தோவலின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.