கேரளாவில் கத்தாலிக்க கன்னியாஸ்திரி தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்பு: கொலையா என போலீஸ் சந்தேகம்
கோட்டயம்: கேரளாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக அவரது அறையில் மீட்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கார்மல் கான்வென்ட்டில் வசித்து வந்தவர் சகோதரி அமலா (69). இவர் நேற்று தனது அறையில் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப் பட்டார்.
அவரது அறையின் கதவு திறந்தே இருந்ததாகவும், அவரது தலையில் பலத்த காயம் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "அமலா தனது ஓய்வு நாட்களை இங்கு கழித்து வந்தார். அமலா இன்று (நேற்று) காலை நேர பிரார்த்தனையில் பங்கேற்கவில்லையென்றும், கடந்த 2 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயுடன், கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சதீஷ் பினோ மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.