இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு: ஒபாமா அறிவிப்பு
டெல்லி: டெல்லியில் இந்திய- அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, இந்தியாவில், ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, குடியரசு தினவிழாவில் பங்கேற்றார். பின்னர் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய - அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களுடன் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு வர்த்தக விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா சார்பில், பெப்சி நிறுவனத்தின் இந்திய தலைவர் இந்திரா நூயி உள்ளிட்ட 30 பேரும், இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் மிட்டல், சைரஸ் மிஸ்ட்ரி, கவுதம் அதானி, விஷால் சிக்கா உள்ளிட்ட 17 பேரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இயற்கையான பந்தம் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், விழாவில் அவர் பேசியதாவது:-
‘‘இந்தியர்கள் உலகம் முழுவதும் தொழில் நிறுவங்களை தொடங்க வேண்டும். இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி செல்ல வேண்டும். அமெரிக்கா இந்தியாவில் முதலீடு செய்கிறது. ஆனால் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்கிறனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்பமுடியாத வணிக திறமையாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இயற்கையான இணைப்பு உள்ளது. உலகம் முழுவதும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நம்பமுடியாத நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். நாங்கள் இந்தியாவுடன் நல்ல வர்த்தகத்தை கொண்டுள்ளோம். வர்த்தகம் அதிகரிப்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும். வர்த்தகம் அதிகரிப்பு இந்தியாவிற்கு வெற்றி. மேலும் அமெரிக்கர்கள் செய்த இயந்திரங்களால் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்த முடியும். நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் பற்றிய உரையாடலை மீண்டும் தொடங்க நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 1 பில்லியன் டாலருக்கு அதிகமாக கடன் வழங்க ஓப்பெக் ஆதரவு தெரிவிக்கும்.
இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அமெரிக்க அமைப்புகள் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்யும். இதில் ரூ.6 ஆயிரம் கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனாக இருக்கும்.'' என்றார்.