ஒபாமாவின் இந்திய வருகையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: உளவு அமைப்புகள் எச்சரிக்கை
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின்போது இந்தியாவில் பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ம்தேதி கொண்டாடப்படுவது வழக்கம். 2015ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று, ஒபாமா இந்தியா வருகிறார்.
இந்த நல்லுறவை கெடுக்க பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது என்று இந்திய உளவுத்துறை சில நாட்கள் முன்பு எச்சரிக்கைபிறப்பித்தது.
இந்நிலையில் அமெரிக்காவும் தற்போது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா சுட்டிக்காண்பித்த பயங்கரவாத அமைப்புகள் மட்டுமின்றி, இந்தியாவிற்குள் இருந்து செயல்படும் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வாரம், ஒற்றை மனிதன் நடத்திய தாக்குதலை போல இந்தியாவிலும் தனித்தனி நபர்கள் ஆங்காங்கு தாக்குதலில் ஈடுபடலாம், குறிப்பாக அமெரிக்க பிரஜைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களும் குறிவைக்கப்படலாம் என்பதால், அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது.
மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற தாக்குதல்களை பயங்கரவாத அமைப்புகள் முன்னெடுக்கும் என்று இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாட்டு உளவு அமைப்புகளும் ஒரேபோன்று தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.