தவறி விழுந்து ஒருவர் பலி.. ஆத்திரத்தில் ஊரே திரண்டு வந்து ரயிலுக்கு தீ வைப்பு- ரயில் நிலையம் சூறை!!
பூரி: ஒடிஷாவில் ரயிலில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்து ஒருவர் பலியானதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு ரயிலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஒடிஷாவின் பூரி மாவட்டத்தில் உள்ள தெலாங் ரயில் நிலையத்தில் பூரி-பர்பில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு இறங்க முயன்ற குலியபடா கிராமத்தைச் சேர்ந்த ரதிகண்டா சதோய் என்ற 22 வயது இளைஞர் அதே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
அவர் புவனேஸ்வரில் சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர். சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
பொதுவாக தெலாங் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை.. இருப்பினும் அந்த ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் மெதுவாக செல்லும்.. அந்த நேரத்தில் ஓடும் ரயிலில் இருந்து சிலர் குதித்து இறங்கிவிடுவர்... அப்படித்தான் ரதிகண்டாவும் கீழே குதித்திருக்கிறார். இதில் தவறி விழுந்து அதே ரயிலில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த உள்ளூர் கிராமத்தினர், அந்த இளைஞரின் உடலை ரயில்வே போலீசார் எடுக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று காலை தெலாங் ரயில் நிலையத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது பூரி-பர்பில் ரயில் மீண்டும் தெலங்கா ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயிலை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் நட்ட ஈடு தரக் கோரி மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த பாதுகாப்புப் படை உயரதிகாரியை பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அவர்கள் அழைத்தனர். ஆனால் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த கிராமத்தினர் ரயில் நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் அங்கே நின்று கொண்டிருந்த காரில் இருந்து பெட்ரோல் கேனை எடுத்து வந்து பூரி-பர்பில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது ஊற்றி சிலர் தீ வைத்தனர். இதில் சில பெட்டிகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தன. மேலும் சில ரயில் பெட்டிகளையும் அவர்கள் அடித்து உடைத்து நாசமாக்கினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி ஊர்மக்களை விரட்டியடித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து நாசமானது. பொதுமக்கள் ஆத்திரத்துடன் ரயிலை மறித்த போது ஓட்டுநரும் பயணிகளும் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் செல்லும் பல ரயில்களை கிழக்கு கடற்கரை ரயில்வே ரத்து செய்தது. சில ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன. நேற்று மாலை 3 மணியளவில்தான் நிலைமை சீரானது. இந்த தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.