மனைவி சடலத்தை கணவர் தூக்கி சென்ற சம்பவம்.. ஒடிசா முதல்வர் அதிரடியாக என்ன செய்தார் தெரியுமா?
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மனைவியின் சடலத்தை தனது மகளுடன் தோளில் சுமந்து சென்ற மனிதரின் லைவ் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி கண்ணீர் வரவழைத்தது.
ஒடிஷா மாநிலம், காலந்தி மாவட்டம் ,பவானிபட்டினா டிபி மருத்துவமனையில் தனாமஜி (42) என்பவர் தனது 12வயது மகளுடன் மனைவியை டிபி சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் அவர் மனைவியை 60கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியை அங்குள்ள மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனராம். என்னால் பணம் கொடுத்து ஆம்புலன்ஸ் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்று கெஞ்சிக்கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் மறுத்துவிட்டனர்.
அதனால் அவரே தனது மனைவியின் உடலை சேலையால் சுற்றிக் கட்டினார். தனது மகளையும் அழைத்துக்கொண்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த தகவல் டிவி மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு பரவவே, அவர்கள் அனைத்தையும் லைவ் செய்தனர். இந்த காட்சிகள் நேற்று நாடு முழுவதும் உள்ள டிவிக்களில் வலம் வந்தது.
மாஜி தனது மனைவியின் உடலை தூக்கிக்கொண்டு 10 கி.மீட்டர்சென்றுவிட்டார். பின்னர் செய்தியாளர்கள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் வாகன வசதி கிடைத்து உடலை கொண்டு சென்றார்.
பின்னர் இதுகுறித்து விசாரித்த சப்க-லெக்டர் திரிபாதி ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் இருந்து இறந்தவர்களின் உடலை வீடுகளுக்கு கொண்டு செல்லும் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை உடனடியாக அறிவித்தார். இந்த திட்டத்திற்கு மகா பிரயாண் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
30 மாவட்டங்களிலும் இந்த திட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்களை அவர்களின் வீடுகளுக்கு இலவசமாக கொண்டு செல்ல இந்த திட்டம் வகை செய்கிறது.
தனாமஜியின் தியாகத்தால் இன்று மாநிலம் முழுவதற்கும் பலன் கிடைத்துள்ளது.