சிக்கலில் சசிகலா.. சிறை விதிகளை அப்பட்டமாக மீறியது 'அதிகாரப்பூர்வமாக' அம்பலம்!
பெங்களூர்: சசிகலா விதிமுறைகளை மீறியது அதிகாரப்பூர்வமாகவே அம்பலப்படுத்தியுள்ளார் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.
சசிகலாவுக்கு சிறையில் ராஜவாழ்க்கை பரிசாக வழங்கப்பட்டு அதற்கு பதிலாக பல கோடிகளை அதிகாரிகள் பெற்றதாக டிஐஜி ரூபா தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்த வீடியோக்களும் வைரலாக வெளியாகி வருகின்றன.
இவற்றை கூட சசிகலா ஆதரவாளர்கள், மோசடி வீடியோ என மறுத்து வருகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாகவே, சசிகலா விதிமுறைகளை மீறிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
தொடர் கண்காணிப்பு
இதை கண்டுபிடித்து வெளியே கொண்டுவந்தவர் நரசிம்மமூர்த்தி. இவர் ஒரு ஆர்.டி.ஐ ஆர்வலர். சசிகலா பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டது முதலே அவரது நடவடிக்கைகளை ஆர்.டி.ஐ மூலமாக தொடர்ச்சியாக கண்காணித்துவருபவர் இவர்.
மாதத்திற்கு இருமுறை
கர்நாடக சிறைத்துறை விதிமுறை 1978ம் ஆண்டு சட்டப்படி, விசாரணை கைதியாக உள்ளவரை வாரத்தில் ஒருமுறை விசிட்டர்கள் பார்க்க முடியும். அதுவே தண்டனை பெற்ற கைதியாக இருப்பின் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு விசிட்டர்தான் பார்க்க முடியும்.
பத்து மடங்கு அதிகம்
சசிகலா தண்டனை கைதி. அவர் ஜூன் 13வரை 107 நாட்களில் 8 பேரை மட்டுமே சந்தித்திருக்க வேண்டும். ஆனால், ஆர்.டி.ஐ மூலம் கிடைத்தத தகவலை வைத்து பார்த்தால், நரசிம்ம மூர்த்தி அதிர்ச்சியடைந்துவிட்டார். சசிகலாவை 82 பேர் இந்த காலகட்டத்தில் சந்தித்துள்ளனர்.
விதிமீறல்
இதிலும் ஒரு விதிமீறல் உள்ளது. அதாவது விதிமீறலுக்குள் மற்றொரு விதிமீறல். அதிகப்படியான நபர்கள் சசியை சந்தித்து மட்டுமல்லாது, சிறையில் பார்க்க வருவோருக்கு வழங்கப்படும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை என்ற கெடுவையும் தாண்டி சசிகலாவை இரவு 6 மணிக்கு மேலும் சிலர் சந்தித்துள்ளனர். இதெல்லாம் எவ்வளவு பெரிய விதிமீறல்? ஆனால் பணம் கொடுத்தால் அதை சட்டைப் பையில் போட்டுக்கொண்டு சொன்ன வேலைகளை செய்து வந்துள்ளனர் சிறைத்துறை போலீசார்.
சசிகலாவுக்கு சிக்கல்
ஆர்.டி.ஐ மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது என்பதால் சிறை விதிகளை மீறியதற்காக, சசிகலா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை யாராவது அணுகினால் இந்த ஆவணம் அதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.