மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் ராஜினாமா !
இம்பால்: மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தலை அடுத்து ஒக்ராம் இபோபி சிங் தனது முதல்வர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் எந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், பாஜக பிற கட்சிகளின் ஆதரவுடன் 32 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியது.
இதனிடையே, பாஜக சட்டமன்ற குழு தலைவராக பிரேன் சிங் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உரிமை கோரவுள்ளார். அவரே முதல்வராக பதவியேற்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
எனவே புதிய அரசு அமைக்க வசதியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி முதல்வர் ஒக்ராம் இபோபிசிங்கை அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.