திமிறுடன் என்னை உளவு பார்க்கிறது முப்தி அரசு... காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா புகார்
ஜம்மு : காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக தலைமையிலான அரசு தன்னை உளவு பார்ப்பதாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உமர் அப்துல்லா கூறியிருப்பதாவது...
ஜம்மு காஷ்மீரில் ஆளும் முப்தி முகமது சையீது அரசு வெட்கமில்லாமல் என்னை உளவு பார்க்கிறது. என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபரை வீட்டு வாசலில் உளவு போலீசார் நிறுத்தி கேள்வி கேட்டுள்ளனர். உங்களுக்கு ஏதாவது தெரியவேண்டும் என்றால், என்னிடம் கேளுங்கள்.
முப்தி முகமதுவோ, அவரது அரசு அதிகாரிகளோ என்னை பற்றி ஏதாவது தெரிய வேண்டும் என்றால் தொலைபேசியை எடுத்து என்னிடமே கேளுங்கள். அதைவிடுத்து என் வீட்டுக்கு வெளியே நிற்கும் பழக்கமில்லாதவர்களிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக கான்பூரில் செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு கூறும்போது, உமர் அப்துல்லாவின் டுவிட்டை படிக்காமல் என்னால் கருத்து கூற முடியாது என்றும், இது சர்ச்சைக்கு வழிவகுத்துவிடும், என்றும் கூறினார்.