கடும் கோபம்.. பெங்களூர் 'டிராபிக் ஜாம்' பிரச்சனையை கையில் எடுத்த ஹிட்லர்
பெங்களூர்: பெங்களூர் என்றாலே உடனே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது மென்மையான கிளைமேட் தான். ஆனால், இப்போது போக்குவரத்து நெரிசல் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு எந்த நாள் பார்த்தாலும் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து நெரிசல்.
பெங்களூர் மக்கள் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை போக்குவரத்து நெரிசலில் சிக்கி சாலைகளில் தான் கழிக்கிறார்கள். அதுவும் சில்க் போர்டு, பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு, நாகவாரா, பிடிஎம் லேஅவுட் மற்றும் கோரமங்களா ஆகிய பகுதிகளை கடப்பதற்கு தனி பொறுமை வேண்டும். அந்த அளவுக்கு அங்கு போக்குவரத்து நெரிசலாக இருக்கும்.
இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சரி செய்ய ஒயிட்பீல்டு பகுதியில் வசிக்கும் சிலர் சேர்ந்து ஒயிட்பீல்டு ரைசிங் என்ற குழுவை துவங்கியுள்ளனர். அந்த குழு வரும் 30ம் தேதி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அந்த குழு ஐடி நிறுவன ஊழியர்கள், அபார்ட்மெண்ட் வாசிகள் என 20,000 பேருக்கு அழைப்பு விடுத்தும் 1,900 பேர் மட்டுமே வர சம்மதித்துள்ளனர்.
இந்நிலையில் ஹிட்லரின் கதையை சொல்லும் டவுன்பால் ஹாலிவுட் படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்து இந்தப் பிரச்சனையை ஹிட்லர் மூலமே விளக்கி அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது ஒயிட்பீல்டு ரைசிங் குழு. அதன்படி போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க வருமாறு ஹிட்லர் உயிரைக் கொடுத்து பேசி அழைப்பு விடுகிறார். நீங்களே வீடியோவை பாருங்களேன்.