காலை 3 மணிக்கு எழுப்பி, குளிக்க வைத்து, பிடித்த டிபன் கொடுத்து யாகூப் மேமனுக்கு தூக்கு!
மும்பை: மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புள்ள யாகூப் மேமனுக்கு, இம்மாதம் 30ம் தேதி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக காலை 3 மணிக்கே, அவனை எழுப்பி, குளிப்பாட்டி தூக்கில் ஏற்ற உள்ளனர். முன்னதாக, பிடித்த காலை சிற்றுண்டி அவனுக்கு கொடுக்கப்பட உள்ளது.
1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பில், பல அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில், கடந்த சில வருடங்கள் முன்பு கைது செய்யப்பட்ட யாகூப் மேமனுக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
30ம் தேதி தூக்கு
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் 30ம் தேதி காலை 4.30 மணிக்கு, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது மேமன் அடைக்கப்பட்டுள்ள நாக்பூர் ஜெயிலில்தான் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தீவிரவாதி கசாப்பை தூக்கிலிட்ட ஊழியரே, மேமனையும் தூக்கிலிட உள்ளார்.
பிடித்த டிபன்
இதற்காக அதிகாலை 3 மணிக்கு யாகூப் மேமன் எழுப்பிவிடப்படுகிறான் (ஒருவேளை தூங்கினால்). அதன்பிறகு, அவனை குளிக்க கேட்டுக்கொள்வார்கள். குளித்து முடித்த பிறகு, புது வெள்ளை உடை கொடுக்கப்படும். எல்லா மரண தண்டனை குற்றவாளிகளை போலவே, மேமனுக்கும், பிடித்த டிபன் கொடுக்கப்படும்.
சூரிய உதயத்துக்கு முன்பு
அதிகாலை 4.15 மணிக்கு தூக்கு மேடைக்கு யாகூப் மேமன் கொண்டுவரப்படுகிறான். சரியாக காலை 4.30 மணிக்கு தூக்கில் தொங்கவிடப்படுகிறான். விதிமுறைப்படி, சூரிய உதயத்துக்கு முன்போ அல்லது பின்போதான் தூக்கு தண்டனை கைதியை தூக்கில் தொங்கவிட வேண்டும். அதன்படி மேமனுக்கு காலை சூரிய உதயத்துக்கு முன்பு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
7 அடி உயரம்
மேமன் 75 கிலோ எடை கொண்டவன். எனவே அவனுக்கு 7 அடி உயர தூக்கு மேடை/கம்பம் நிறுவப்படுகிறது. உடல் எடை அதிகமாக இருக்கும் கைதிகளுக்கு, தூக்கு கயிறு உயரம் குறைக்கப்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு தொங்கவிடும் உயரம் 9 அடிவரை செல்லும். அப்போதுதான், விரைவில் உயிர் பிரியும் என்பது இதற்கு காரணம்.
இறுதி சடங்கு
அதேநேரம், இறுதி சடங்கு எங்கு நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சடலங்களை பொது இடங்களில் இறுதி சடங்கு செய்ய அனுமதிப்பதில்லை. சிறைக்குள்ளேயே இறுதி சடங்குகள் முடிவடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குடும்ப உறுப்பினர்கள், அதில் பங்கேற்பார்கள்.