சியாச்சினில் கடுங்குளிரால் மாதம் 2 ராணுவ வீரர்கள் பலியாகும் அவலம்
ஸ்ரீநகர்: சியாச்சின் போர் முனையில் கடுங்குளிரை தாங்க முடியாமல் மாதம் 2 வீரர்கள் மரணிக்கும் அவலம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் தான் உலகின் மிக உயரமான போர் முனை. அங்கு பணியாற்றும் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விட கடுங்குளிரை எதிர்த்து தான் முதலில் போராட வேண்டியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை தடுத்து நிறுத்த கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு சியாச்சினில் இந்திய வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
சியாச்சினில் வீரர்களுக்கு கடுங்குளிரால் உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது.
வீரர்கள்
சியாச்சினில் பணிபுரியும் இந்திய வீரர்களில் மாதத்திற்கு இருவர் பலியாகி வருகிறார்கள். வீரர்கள் எதிரிகளால் கொல்லப்படவில்லை. மாறாக கடுங்குளிரால் பலியாகி வருகிறார்கள்.
869 பேர்
கடந்த 1984ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சியாச்சினில் குளிரால் 869 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த தகவல் லோக் சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
883 வீரர்கள்
சியாச்சினில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 9 வீரர்கள் பலியாகினர். பனியில் இருந்து மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா மருத்துவமனையில் மரணம் அடைந்தார். மேலும் இந்த ஆண்டு சியாச்சினில் 4 வீரர்கள் இறந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை சியாச்சினில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது.
குறைவு
குளிரால் பலியாகும் வீரர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 24 ஆக இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2015ல் 5 ஆக குறைந்துள்ளது என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 6, 566 கோடி
2012-2013 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளில் சியாச்சினில் இருக்கும் வீர்களின் உடைகள் மற்றும் மலையேறும் உபகரணங்களுக்கு மட்டும் ரூ.6 ஆயிரத்து 566 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
சியாச்சினில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பனி, கடுங்குளிரால் பலியாகி வருகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. இதில் 140 பேர் பலியாகினர்.
பிரச்சனை
சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஞாபக மறதி, பேச்சு குளறல், நுரையீரல் தொற்று, மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு தேவைப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.