புற்று நோயுடன் போராடிய 14 வயது சிறுவன் சந்தனம் மரணம்
பெங்களூரு: சந்தன். 14 வயதேயான இளம் போராளி. புற்று நோயுடன் போராடி வந்த இந்த சிறுவன் இன்று மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டான், மரணத்தைத் தழுவினான்.
இந்திய விமானப்படை மீது மிகுந்த பிரியமும், அன்பும், ஏன் பக்தியும் வைத்திருந்தன சிறுவன் சந்தன். புற்றுநோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடி வந்த சந்தனின் மூச்சு இன்று மாலை நின்று போனது.
பீகாரைச் சேர்ந்தவன் சந்தன். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான அறிவியல் கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புற்றுநோய் முற்றிய நிலையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த வந்த சந்தனுக்காக லட்சக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வந்தனர்.
சந்தனின் நிலை குறித்து அறிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சோகமடைந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தனுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரி செய்தி போட்டார். இதுகுறித்து கலாம் எழுதிய டிவிட்டில், "இளம் விமானி சந்தன் குறித்த செய்தியைப் படித்து வேதனையுற்றேன். அவனது நலனுக்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார் கலாம்.
அவரது டிவிட்ட பல்லாயிரக்கணக்கில் ரீடிவீட் செய்யப்பட்டது. அனைவரும் சந்தனுக்காக பிரார்த்தித்தனர். ஆனால் அது நிராசையாகிப் போனது. இன்று மாலை சந்தன் மரணமடைந்தான். சந்தனின் மரணத்தை அவரது தந்தை கிரிஷ் மண்டல் உறுதி செய்துள்ளார். சந்தன் மரணமடைந்து விட்டான். அவனது உடலை பீகாருக்கு எடுத்துச் செல்கிறோம். அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். சந்தனுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கிரிஷ் மண்டல் கூறியுள்ளார்.
சந்தனின் மறைவுக்கு இந்திய விமானப்படையின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அரூப் ரஹாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். உண்மையான போராளியாக திகழ்ந்த சந்தன் நம் அனைவரையும் கவர்ந்து விட்டான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ரஹா.
சந்தனுக்கு நிறைய கனவுகள்.. அதில் ஒன்று. சொந்தமாக ஒரு விமானம் வாங்குவது என்பது. அந்தக் கனவை சமீபத்தில் பெங்களூரு ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் இயக்குநர் பி.எஸ்.சுப்பிரமணியம் நிறைவேற்றி வைத்தார். சந்தனுக்காக கம்பீரமான தேஜாஸ் விமானத்தின் மாதிரியை அனுப்பி வைத்தார் சுப்பிரமணியம் என்பது நினைவிருக்கலாம்.