"அக்னி" ஏவுகணையை மயக்கிச் சாய்த்த "இசை ஏவுகணை"...!
பெங்களூரு: பெங்களூருவுக்கு வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தனது கார் டிரைவரை பார்த்து வியந்து, நெகிழ்ந்துள்ளார்.
பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தார். அவரை குண்டு துளைக்காத காரில் அழைத்துச் செல்ல, கர்நாடக அரசின் விவிஐபி பாதுகாப்பு பிரிவில் இருந்து 52 வயதான நந்தீஸ்வர் ஆச்சாரியா என்ற டிரைவரை இம்மாநில அரசு நியமித்தது.
ஆச்சாரியாவுடனான பயணம் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது கலாமுக்கு. இதுபற்றி அப்துல் கலாம் 'ஒன்இந்தியாவிடம்' கூறியதாவது:
ஏகப்பட்ட திறமையுடன் கூடிய ஒருவர் எனக்கு டிரைவராக கிடைக்கப் பெற்றதை தெரிந்து இன்ப அதிர்ச்சியடைந்தேன். பெங்களூரில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக கலந்து கொண்டு காரில் பயணித்தபோதுதான், டிரைவர் ஆச்சாரியா, தனக்கு இசையில் ஆர்வம் இருப்பதை தெரிவித்தார். எனவே, பாடிக்காட்டுமாறு நான் கேட்டேன்.
ஆச்சாரியாவும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், பாட ஆரம்பித்தார். ஆர்.கே.ஸ்ரீகண்டன், கேசவமூர்த்தி, டி.ஆர்.மகாலிங்கம் என வயோலின், புல்லாங்குழல் என ஒவ்வொன்றுக்கும் தனக்கு தனித்தனி குருககள் இருப்பதாக ஆச்சாரியா கூறினார். அவர் கூறிய அத்தனை குருக்களுமே திறமையில் மேம்பட்டவர்கள். ஆச்சாரியாவின் பாடலிலும் அது எதிரொலித்தது.
டிராபிக் சிக்னல்களில் கார் நிற்கும்போதெல்லாம், ஆச்சாரியா பாட ஆரம்பிப்பார். ஸ்ரீராகத்தில் தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆச்சாரியா பாடியபோது அப்படியே லயித்து போய்விட்டேன். அருமையான குரல் வளமும் ஆச்சாரியாவுக்கு அமைந்திருந்தது என்ற கலாம், ஆனால் கார் ஓட்டிக் கொண்டே பாடக்கூடாது என்பதை ஸ்டிக்டாக சொல்லிவிட்டேன் என்றார் சிரித்தபடி.
கலாம் மேலும் கூறுகையில், "டிரைவிங் செய்தபோதும், ஆச்சாரியாவின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டே இருந்தது. இசை ஒரு மனிதனை எப்படி மகிழ்ச்சிகரமானவராக மாற்றும் என்பதற்கு ஆச்சாரியா ஒரு உதாரணம். அவர் தனது பணியை மிகவும் மகிழ்ச்சியோடு செய்கிறார்.
பணியை எப்படி மகிழ்ச்சியோடு அணுக வேண்டும் என்பதை ஆச்சாரியாவிடமிருந்து நாம் கற்க வேண்டும்" என்றார்.
கலாமிடம் பல ஆண்டுகளாக, உதவியாளராக பணியாற்றும் ஆர்.கே.பிரசாத் கூறுகையில், "இந்தியாவில் யாரிடமாவது எந்த ஒரு திறமையாவது தென்பட்டாலும், அதை கலாம் பாராட்ட தயங்கமாட்டார். ஆச்சாரியாவின் திறமை, கலாமின் கவனத்தை ஈர்த்துவிட்டது" என்றார். அதை எதிரொலிக்கும் வகையில், கலாம் கலந்து கொண்ட விழா ஒன்றிலும், ஆச்சாரியா குறித்து கலாம் குறிப்பிட்டு பேசி பாராட்டினார்.
ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த ஆச்சாரியா இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், "எனது தந்தை கங்காதரர் ஆச்சாரியா, ஒரு வயலின் வித்வான். அவரிடமிருந்து அடிப்படை சங்கீத ஞானத்தை பெற்றேன். கலாம் போன்ற பெரிய மனிதரிடமிருந்து எனக்கு கிடைத்த இந்த பாராட்டால் நெகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.