டெல்லியில் "வெங்காய" விலை விஸ்வரூபம்! 532 'பதுக்கல்' இடங்களில் அதிரடி ரெய்டு!!
டெல்லி: தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து 532 "பதுக்கல்" இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 42 வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் வெயில் காரணமாக கடும் மின்வெட்டும் நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காய்கறி உற்பத்தியும் குறைந்து, டெல்லியின் மொத்த சந்தைகளுக்கு வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதனால் காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள வெங்காய மண்டிகளில், தொழிலாளர்கள் தங்கள் கூலியை உயர்த்தக் கோரி கடந்த திங்கள்கிழமை வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், வெங்காயத்தின் விலை டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் மேலும் இரு மடங்கானது.
இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கியவுடன் மோடியின் அரசு உஷார் ஆனது. இதற்காக கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரைவை கூடி ஆலோசனை செய்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் டெல்லியில் 532 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் 42 வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் அத்தியாவாசிய உணவுப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி மாநில உணவுப் பொருள் விநியோகத் துறை ஆணையர் எஸ்.எஸ்.யாதவ் கூறியுள்ளார்.
வேன்களில் வெங்காய விற்பனை
இத்துடன் டெல்லியில் 200 முக்கிய இடங்களில் வேன்களில் வைத்து வெங்காயம் விற்க ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வெங்காய விலை கிலோ ரூ.100 வரை உயர்ந்தது.
விலையை கட்டுப்படுத்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு மொபைல் வேன்களில் வெங்காயம் விற்பனை செய்தது. இதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படுகிறது.