பாஸ்போர்ட் வழங்க.. இனி ஆன்லைன் மூலம் போலீஸ் விசாரணை
பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணை ஆன்லைன் மூலம் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லி: பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணை இனி ஆன்லைன் மூலம் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பாஸ்போர்ட் வேண்டி ஒருவர் விண்ணப்பித்த பின்னர், அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விசாரணையை போலிசார் நேரில் சென்று மேற்கொள்வர். போலீசாரின் தகவல்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர், அதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பாஸ்போர்ட் அலுவலகம் மேற்கொள்ளும்.
இந்த நடைமுறையால் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. எனவே, காலதாமதத்தைக் குறைக்க மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும் முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் நேரில் சென்று குற்றப்பின்னணி குறித்து விசாரிக்கத் தேவையில்லை.
இந்தத் திட்டம் அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்தப்பட உள்ளது என்று உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்துள்ளார். நாட்டின் சில மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.