அமித் ஷாவை சமாளிக்க பிரியங்காவால் மட்டுமே முடியும்: ராகுலிடம் சொன்ன தொண்டர்கள்
லக்னோ: பாஜக தலைவர் அமித் ஷாவை சமாளிக்க பிரியங்கா காந்தி வாத்ராவால் தான் முடியும். அதனால் அவருக்கு கட்சி பொறுப்பளிக்க வேண்டும் என உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் நடந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து பிரியங்கா காந்தி வாத்ராவை கட்சியின் துணை தலைவர் ஆக்குமாறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரே பரேலிக்கு சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் ராகுலிடம் கூறுகையில்,
ராகுல் அண்ணா, அமித் ஷாவுக்கு பிரியங்காவால் தான் தக்க பதிலடி கொடுக்க முடியும். அதனால் அவருக்கு கட்சியின் துணை தலைவர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்றனர்.
இதை கேட்ட ராகுல் பதில் தெரிவிக்காமல் சிரித்தபடி சென்றுவிட்டார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் வரும்போதே பிரியங்கா தனது திறமையான பேச்சால் மக்களை கவர்ந்துவிடுகிறார். இந்நிலையில் அவர் கட்சி பொறுப்பேற்றால் காங்கிரஸுக்கு நல்லது நடக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.