மே 30ல் தென் மேற்கு பருவமழை தொடங்கும்... வானிலை மையம் அறிவிப்பு
இந்த ஆண்டு மே 30ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி: தென் மேற்கு பருவமழை சற்று முன்னதாகவே தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென் மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை பொழியும். இந்தப் பருவமழை பொதுவாக கேரளா மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மே 30ம் தேதியே பொழியத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழைக்கான கருமேகங்கள் சூழ்ந்து வருவதாகவும், இந்த குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே கேரளாவில் பொழியத் தொடங்கும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொர்பாக
வானிலை அதிகாரி ரஜீவன் கூறும் போது, பருவமழை தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். எல்நினோ காரணமாகவே முன்கூட்டியே பருவமழை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு ஆண்டின் மழை பொழிவில், 70 சதவீதத்தை தென்மேற்கு பருவ மழை தான் வழங்குகிறது. முதலில் அந்தமான் நிகோபார் தீவுகள் கடலில் தான் தென் மேற்கு பருவமழை காலம் துவங்கும். அதனைத் தொடர்ந்து கேரளா மகாராஷ்டிரா என வட மாநிலங்களில் மழை கொட்டும்.
கடந்த ஆண்டு அந்தமானில் மே 18 ம் தேதியே பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.