ஏழுமலையானுக்கு ரூ 5.6 கோடிக்கு நகைகள் காணிக்கை.. வலுக்கும் எதிர்ப்பால் தெலுங்கானா முதல்வர் திணறல்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திருப்பதி கோவிலுக்கு 5.5கோடி ரூபாய்க்கு நகைகள் வழங்கியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திருப்பதி கோவிலுக்கு 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை நேற்று காணிக்கையாக வழங்கினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனி தெலுங்கானா மாநிலம் உதயமானால், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடியில் தங்க நகைகள் காணிக்கையாக வழங்குவதாக சந்திரசேகர ராவ் வேண்டி கொண்டார்.
இதையடுத்து தனித்தெலுங்கானா உருவாகி சந்திரசேகர ராவ் முதல்வராக பதவி ஏற்றவுடன், திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தும் நகைகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
தனி விமானங்களில் திருப்பதிக்கு பயணம்
தங்க நகைகள் செய்யும் பணி முடிவடைந்ததையடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்ற திட்டமிட்ட சந்திரசேகரராவ், தனது குடும்பத்தினர், தெலுங்கானா அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஐதராபாத்தில் இருந்து 2 தனி விமானங்களில் நேற்று திருப்பதிக்கு வந்தனர்.
காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகள்
அங்கிருந்து கோவிலுக்கு சென்ற முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரிடம் நகைகளை காணிக்கையாக வழங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்.
மக்களின் பணத்தில் காணிக்கையா?
சந்திரசேகர ராவ் மக்களின் பணத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5.5 கோடி நகைகளை காணிக்கையாக செலுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களின் பணத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் காணிக்கையாக செலுத்துவதா என்றும் கண்டனங்கள் எழுந்தன.
சந்திரசேகர ராவ்க்கு காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான எம்.சசிதர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரசேகர ராவ் தனது தனிப்பட்ட வேண்டுதலுக்காக மக்களின் பணத்தை பயன்படுத்தி காணிக்கை செலுத்துவது சரி அல்ல என்று அவர் கூறினார்.