கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்பு... தற்காலிக இடத்தில் சிலை திறப்பு !
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கை கரைப் பகுதியில் திருவள்ளுவர் சிலை நிறுவுதற்கு சாதுக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் ரூ.20 லட்சத்தில் 12 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்க திருக்குறள் மாணவர், இளைஞர்அமைப்பு ஏற்பாடு செய்தது. தமிழகத்தின் நாமக்கல்லில் திருவள்ளுவர் உருவச் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையில் கல் எடுக்கப்பட்டது.
20 சிற்பக் கலைஞர்கள் தொடர்ந்து 35 நாள்கள் பணியாற்றி சிலையை உருவாக்கினர். 12 அடி உயரம் உள்ள இந்தச் சிலையின் எடை 4.50 டன் ஆகும். இது தருண் விஜய்யின், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த சிலை நிறுவப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் பெருமையை வட மாநிலங்களில் அறியச் செய்யும் வகையில், இந்தச் சிலையை கன்னியாகுமரி முதல் ஹரித்துவார் வரை கொண்டு செல்வதற்கான இயக்கத்தை "திருவள்ளுவர் கங்கை பயணம்' என்ற பெயரில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தருண் விஜய் பெரும் முயற்சி மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து இது கன்னியாகுமரியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதன் திறப்பு விழா, ஹரித்துவாரில் இன்று நடக்க இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலையை, கங்கை கரையோரம் நிறுவ அங்குள்ள சாதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கடைசி நேரத்தில் உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளூவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியை உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது.
பின்னர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வைத்து திருவள்ளூவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.