'அம்மா' போட்டோ அடங்கிய ஃபைலுடன் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஓ.பி.எஸ்!
டெல்லி: மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் கூட்டத்தில் பேசுவதற்கு முன்னதாக தனது முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எடுத்து வைத்துவிட்டு பேசினார்.
காவிரி, வைகை மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இணைக்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.
2015 - 2016-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று ஆலோசனை நடத்தினார்.
2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் சேவை, சரக்கு வரி, அமல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாநில அரசுகளுடன் ஆலோசித்து கருத்து ஒற்றுமை ஏற்படுத்தாமலேயே சேவை, சரக்கு வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாக தெளிவான திட்டங்கள் வகுக்கப்படாததால் கருத்து ஒற்றுமை ஏற்படுத்திய பிறகே வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காவிரி, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பதற்கான 5 ஆயிரத்து 166 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மத்திய அரசு ஒப்புதலுக்காக காத்திருப்பதாக சுட்டிக்காட்டிய பன்னீர் செல்வம் 2015 - 2016 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னாறு, பாலாறு, காவேரி மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் கூடுதலாக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சென்னையில் செயல்பட வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே நெம்மேலி, மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஆலையை நிறுவ வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களான சேலம், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக அறிவிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிதிஅமைச்சர்கள் கூட்டத்தில் பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.