கட்சியும் சின்னமும் எங்களுக்கே.. தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறி இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தன.
இந்நிலையில் சமீபத்தில் இரு அணிகளும் இணைந்தன. இதைத்தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இக்கூட்டத்தில், பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆவணங்கள் தாக்கல்
இந்த தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று தாக்கல் செய்தனர்.
சின்னம், கட்சி தங்களுக்கே
அப்போது கட்சி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கப்பட்டது.
அணிகள் இணைந்துவிட்டன
அதில், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் இணைந்து விட்டதாகவும், இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்து விட்டதால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.