டெல்லியில் ஒரு காத்திருப்பு + இழுத்தடிப்பு!
டெல்லி: துணை ஜனாதிபதி பதவியேற்பில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி முன்பு போல கவனிக்கவில்லை என்று பேச்சு எழுந்துள்ளது.
இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் தனித்தனியாக கடந்த 10 ந்தேதி டெல்லிக்கு படையெடுத்தனர். இரவில் டெல்லியை அடைந்தனர். தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடியும், மைத்ரேயன் இல்லத்தில் பன்னீரும் தங்கினர். தமிழ்நாடு இல்லத்தில் ஏக கெடுபிடிகளை கையாண்டார்கள் அதிகாரிகள். இதனால் பத்திரிகையாளர்கள் நொந்து போனார்கள்.
தம்பிதுரை, வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி.க்களோடு நள்ளிரவு வரை ஆலோசித்தார் எடப்பாடி. அதில், சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை தவிர்த்திருக்கலாம் என தம்பிதுரை சொல்ல, தினகரனின் ஆட்டம் எல்லை மீறிப் போகிறது. மாமன் மச்சான்கள் ஒன்று சேர்ந்ததிலிருந்தே தினகரன் வேறு கேம் ஆட திட்டமிட்டு விட்டார். உளவுத்துறையிலிருந்து அவர்களின் சதி திட்டங்கள் பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன. இதுபத்தியெல்லாம் மூத்த அமைச்சர்களிடம் விவாதித்தப்போ, இனியும் அமைதியாக இருக்க வேண்டாம். ஒரு முடிவை எடுப்போம் என்றே அவர்களும் விரும்பியதால்தான் அந்த முடிவை எடுத்தேன் என விளக்கமளித்திருக்கிறார் எடப்பாடி.
டைம் தருவதில் இழுத்தடிப்பு
11 ந்தேதி. வெங்கையாநாயுடு பதவியேற்பில் எடப்பாடி, தம்பிதுரை, பன்னீர் , மைத்ரேயன் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும் மோடியை 11.30க்கு சந்திக்க எடப்பாடிக்கு நேரம் தரப்பட்டிருந்தது. ஆனால், பன்னீருக்கு நேரம் தரப்படவில்லை. இதற்காக பிரதமரின் செயலாளர்களை அடிக்கடி ரொடர்புகொண்டபடியே இருந்தார் மைத்ரேயன். ஆனாலும் நேரம் தரப்படவில்லை. இதனால், விழாவில் கலந்துகொண்டிருந்த சூழலிலும் பன்னீருக்கு ஒருவித பதட்டம் இருந்துகொண்டே இருந்ததாம்.
வெயிட்டிங் ஹாலில் காத்திருப்பு
விழா முடிந்ததும், பிரதமர் அலுவலகத்துக்கு சென்றனர் எடப்பாடியும் தம்பிதுரையும். வெயிட்டிங் ஹாலில் அவர்களை உட்கார வைத்தனர் அதிகாரிகள். நேரம் 11.30 ஐ கடந்தது. மோடி வரவில்லை. 12 மணி கடந்த பிறகும் மோடி வரவில்லை. இதனால், அதிகாரிகளிடம் தம்பிதுரை கேள்வி கேட்டபோதும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால் அசதியில் அப்படியே தங்களது இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டனர் எடப்பாடியும் தம்பிதுரையும். 12 .40 -க்குத்தான் பார்லிமெண்டிலிருந்து தனது அலுவலகம் வந்தார் மோடி. அவர் வந்ததும், தூங்கிக்கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பினர் அதிகாரிகள்
பிறகு பேசலாம்
மோடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர். எடப்பாடியின் முதுகில் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்த மோடி, நேரம் இல்லை. பிறகு பேசலாம். கிளம்புங்கள் என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் மோடி. நிறைய பேசலாம் என நினைத்திருந்த எடப்பாடிக்கு மோடியுடனான சந்திப்பு சப்பென்றாகிவிட்டது. இறுக்கமான மனநிலையிலேயே அங்கிருந்து தமிழ்நாடு இல்லம் வந்தனர்.
பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு
பத்திரிகையாளர்களை சந்திக்க ஆரம்பத்தில் மறுத்த அவர், ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியவில்லை. அப்போது மோடியின் சந்திப்பு குறித்து கேள்வி வந்தபோது, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன் என சொன்னார். இரவுக்குள் மீண்டும் மோடியிடமிருந்து தமக்கு அழைப்பு வரும் என நினைத்து இரவு வரை காத்திருக்க முடிவு செய்தார் எடப்பாடி. இதனால், இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை சென்னைக்கு செல்லும் பல்வேறு விமானங்களிலும் டிக்கெட்டை மாற்றி மாற்றி புக் பண்ணிக்கொண்டே இருந்தனர் அதிகாரிகள்.
ஓபிஎஸ்ஸின் நிலைமை
எடப்பாடியின் நிலை இப்படியிருக்க, பன்னீரின் நிலை அதைவிட பரிதாபம். அவருக்கு நேற்று மோடியின் அப்பாயிண்மென்ட் கிடைக்கவே இல்லை. மோடியை எடப்பாடி சந்தித்துவிட்ட நிலையில், நாம் சந்திக்காமல் போனால் இமேஜ் டேமேஜ் ஆகும் என நினைத்து, மோடியை சந்திப்பதற்கான பகீரத முயற்சியில் இறங்கினார் மைத்ரேயன். ஆனாலும், மோடி சந்திப்பு நேற்று இரவு வரை உறுதி செய்யப்படவில்லை. இதனால் மோடியை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பக்கூடாது என டெல்லியில் தங்கியிருக்க முடிவு செய்தார் பன்னீர்.
முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் அனுபவம் இதுதான் என்று சொல்கிறார்கள்.