மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி: இன்று ஜனாதிபதியை சந்திக்கும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள்
டெல்லி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்திக்கிறார்கள்.
தன்னை வற்புறுத்தியதால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக சசிகலா அணி, ஓ. பன்னீர்செல்வம் அணியாக பிரிந்தது.
போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வத்தை சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஓ.பி.எஸ். அணியோ சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவு 12 அதிமுக எம்.பி.க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து பேசுகிறார்கள். மைத்ரேயன் தலைமையில் அவர்கள் பிரணாபை சந்திக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளார்கள்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக சட்டசபையில் நடந்த விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பிரணாபிடம் தெரிவிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில் இன்று 12 எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்.