கதிராமங்கலம், நெடுவாசலைத் தூக்கி குப்பையில் போடு.. எம்.எல்.ஏக்களுக்கு கைய நிறைய அள்ளிக் கொடு!
விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை சங்கிலியால் கட்டி 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று மனிதர்களை ஏர்கலப்பையில் பூட்டி சாலைகளில் உழுதனர்.
விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் தமிழக எம்எல்ஏக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 17ஆம்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் கைகளில் சங்கிலி பூட்டி அவர்களை அங்கும், இங்கும் இழுத்துச் சென்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, டெல்லி போலீசார் எங்களை இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்றும், உடனடியாக தமிழ்நாடு திரும்புங்கள் என்றும் கூறி எங்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகவும், போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள போராட்டத்தை இன்று நடத்தினோம் என்றார்.
இன்று ஏர் கலப்பையில் மனிதர்களை பூட்டி சாலைகளில் உழுதனர். விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். மாடுகளை கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதை உணர்த்தும் விதமாக இந்த போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் கூறினார்.