ராஜ்யசபா தேர்தலில் மகாராஷ்டிராவிலிருந்து ப.சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி: ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட உள்ளார்.
மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஜூன் 29ம் தேதியோடு காலாவதியாக உள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் காலியாகும் ஆறு பதவி இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்கள் வாக்கு அவசியம். தமிழகத்தில் காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதால், அதிமுக, திமுக மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ப.சிதம்பரம் மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் போட்டியிடவில்லை. எனவே ராஜ்யசபா தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் அவரை கொண்டு செல்ல காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், கபில் சிபல், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்ணாண்டஸ், விவேக் தன்கா, சயா வர்மா போன்றவர்களுக்கும் ராஜ்யசபா சீட் தரப்பட்டுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் கர்நாடகாவிலிருந்தும், கபில் சிபல் உத்தரபிரதேசத்தில் இருந்தும் போட்டியிட உள்ளனர். கர்நாடகாவிலிருந்து சிதம்பரத்தை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.