காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு.. பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்.. எல்லையில் பதற்றம்
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று 2வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் இன்றும் 2வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இது 4வது முறையாகும். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிம்பர்காலி எல்லை பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது நேற்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அதே போன்று மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. எல்லையோரம் வசிக்கும் மக்களில் சிலரும் இந்திய ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், 2வது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதிகாலையில் இருந்து நடத்தப்படும் இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இது 4வது முறையாகும். இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.