பாகிஸ்தான் படகு வெடித்த விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய கடற்படை அதிகாரி டிரான்ஸ்பர்
டெல்லி: குஜராத் கடற்பரப்பில் பாகிஸ்தான் மர்ம படகு வெடிவைத்து தகர்க்கப்பட்ட விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பிய கடலோரக் காவல்படை அதிகாரி லோஷாலி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில கடற்பரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று கருதப்பட்ட படகு ஒன்று வெடித்து சிதறியதில், அந்த படகை தான் தான் வெடிக்கச் செய்ய உத்தரவிட்டதாகக் கூறிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் இந்திய கடலோரக் காவல்படை தலைமை அதிகாரி பி.கே. லோஷாலி.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்குள் அந்த மர்ம படகு ஊடுவ முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏராளமான வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. உடனடியாக கடலோரக் காவல் படையினர் படகை சுற்றிவளைக்க விரைந்தனர். அதற்குள் படகு வேகமாக திரும்பி சென்றது. ஆனால், கடலில் வெடித்துச் சிதறியது.
பாதுகாப்புத்துறை விளக்கம்
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கையில், "பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய படகில் இருந்த 4 பேரையும் சரணடையும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால், படகில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் 4 பேரும் பலியாகி விட்டனர். படகு எதேச்சையாக வெடித்துச் சிதறியது. அதை பாதுகாப்புப் படையினர் தகர்க்கவில்லை" என்று கூறியது.
சுட்டுத்தள்ள உத்தரவு
இதற்கிடையில், சூரத் நகரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை டிஐஜி லோஷாலி பங்கேற்றார். அப்போது, "டிசம்பர் 31-ம் தேதி உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அன்று பாகிஸ்தானில் இருந்து குஜராத் பகுதிக்குள் ஊடுருவிய படகை சுட்டுத் தள்ள உத்தரவிட்டேன் என்றார்.
பிரியாணி போடவேண்டுமா?
அப்போது நான் காந்தி நகரில் இருந்தேன். எனக்கு தகவல் வந்தவுடன் அந்தப் படகை தகர்க்க உத்தரவிட்டேன். அதில் வந்தவர்களுக்கு நாம் பிரியாணி பரிமாற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் லோஷாலி பேசியதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.
மறுத்த லோஷாலி
இந்நிலையில், தான் அப்படி சொல்லவில்லை என்று லோஷாலி மறுத்தார். தேச விரோத சக்திகள் நமது கடல் பகுதிக்குள் நடமாடுவதை அனுமதிக்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு பிரியாணி பரிமாறப் போவதுமில்லை என்றுதான் பேசினேன். மர்ம படகை தகர்க்க உத்தரவிட்டதாக வந்துள்ள செய்தி தவறானது. நான் பேசியவை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
ஆபரேசன்
மேலும் மர்ம படகை எதிர்கொள்ளும் ஆபரேஷன் என் தலைமையில் நடக்கவில்லை. என்னுடைய உயரதிகாரி வடமேற்கு பகுதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் குல்தீப் சிங் ஷெரோன் தலைமையில்தான் ஆபரேஷன் நடந்தது என்றும் லோஷாலி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் நடவடிக்கை
இதனிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், "பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய மர்ம படகு, தப்பிச் செல்லும்போது வெடிகுண்டுகள் வெடித்து தானாக தகர்ந்தது. அதை யாரும் தகர்க்கவில்லை. இந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு மாறாக கடலோரக் காவல் படை டிஐஜி லோஷாலி கூறியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
லோஷாலி டிரான்ஸ்பர்
இந்த நிலையில், இன்று லோஷாலி கடலோரக் காவல் படை டிஐஜி பதவியில் இருந்து நீக்கப்பட்டு காந்திநகரில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்றும், அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.