குஜராத்தில் தாக்குதல் நடத்த படகில் தீவிரவாதிகளை அனுப்பியது பாக். உளவு அமைப்பான ஐஎஸ்ஐ!
டெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் வந்த மர்ம படகில் தீவிரவாதிகளை அனுப்பி வைத்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பாக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஜனவரி 1ம்தேதி, அரபிக்கடல் மார்க்கமாக, குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மர்ம படகை இந்திய கடற்படை தடுத்து நிறுத்த முற்பட்டது. அப்போது அந்த படகில் இருந்த நால்வரும் அதை வெடித்து சிதற செய்து உயிரிழந்தனர்.
மும்பையில் 2008ம் ஆண்டு கடல்மார்க்கமாக வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல குஜராத்தில் தாக்குதலை நடத்த இந்த படகு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானின், ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது என்று இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற கடல்படை அதிகாரி ஒருவர் தலைமையில், பயிற்சி பெற்ற நால்வர் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் துறைமுகத்தை நோக்கி வந்ததாக இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது. நேரடியாக இதுபோன்ற தாக்குதல்களில் இறங்கினால் உலக நாடுகள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்பதால் ஐஎஸ்ஐ அதிகாரிகளை தவிர்த்து, வேறு தீவிரவாதிகள் மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவ சதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம், அந்த படகு பாகிஸ்தானில் இருந்து சென்றதில்லை என்றும், கடத்தல்காரர்கள் படகாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்துவருகிறது. மும்பையில் தாக்குதல் நடைபெற்ற பிறகும், பாகிஸ்தான் இப்படியேதான் தனக்கு சம்மந்தம் இல்லாததை போல கூறிவந்தது.
ஐஎன்எஸ் துவாரகா-2 போர்க்கப்பல் இயக்கத்தை, ஜனவரி 12ம்தேதி போர்பந்தர் துறைமுகத்தில் தொடங்கி வைக்க பாதுகாப்பு துறை திட்டமிடுருந்தது. இநத் நிகழ்ச்சியை கெடுக்கவே தீவிரவாதிகள் போர்பந்தரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தீவிரவாதிகள் வந்த படகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால், 12ம்தேதி நடைபெறவிருந்த போர்க்கப்பல் இயக்க துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும்.