பாக். படகில் வந்தவர்கள் தீவிரவாதிகளே.. கடத்தல்காரர்கள் என சொல்வது அபத்தம் - பாரிக்கர்
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் படகில் ஊடுறுவி வந்தவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என கூறுவது அபத்தமானது. அவர்கள் தீவிரவாதிகள்தான் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
படகில் இருந்த நான்கு பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடத்தல்காரர்கள் அல்ல. கடத்தல்காரர்களாக இருந்தால் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் என்றும் பாரிக்கர் கேட்டுள்ளார்.
அவர்கள் தற்கொலை செய்து கொண்டதால்தான் அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
கடத்தல்காரர்கள் என்று கூறுவது அபத்தமானது:
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நான்கு பேரும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறுவதே தவறானது, அபத்தமானது. மேலும் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையும், அவர்கள் வந்த பாதையும், கடத்தல்காரர்கள் வரும் பாதை அல்ல.
மேலும் மீனவர்கள் இந்தப் பாதையில் வரவும் மாட்டார்கள். இவர்கள் வந்த பாதை யாருமே வராத தனித்த பாதையாகும்.
இவர்கள் வந்த பாதையும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் வந்ததையே உணர்த்துகிறது. கடத்தல்காரர்கள் செய்யும் எந்த செயலையும் இவர்கள் செய்யவில்லை.
சிறப்பாக பணியாற்றிய கடலோரக் காவல் படை:
பாகிஸ்தான் படகு விவகாரத்தில் கடலோரக் காவல் படை செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. மிகச் சிறந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் படகு எந்த வகையிலும் தப்பி விடாத வகையில் மிகச் சிறப்பாக தடுத்து நிறுத்தியுள்ளனர். சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார் பாரிக்கர்.