இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள்-பாகிஸ்தான் ராணுவம் இணைந்த கூட்டுப்படை உருவாகிறது
டெல்லி: எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாதிகளையும், இந்திய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தச் செய்ய வைக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் ஒரு புதிய தீவிரவாத அமைப்பை 'உருவாக்கி' உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வழக்கமான போர்முறைகளால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள பாகிஸ்தான், தீவிரவாதிகளை துணைக்கு சேர்த்துக் கொண்டுள்ளது. இடாரா-டுல்-பாகிஸ்தான் (ஐடிபி) என்ற தீவிரவாத அமைப்புதான் இதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த தீவிரவாத அமைப்பை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு உருவாக்கியுள்ளது.
ராணுவத்துடன் கலப்பு
பாகிஸ்தான் முன்னாள் விமானப்படை வீரர் அட்னான் ரஷித் தலைமையிலான இந்த தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தானின் விமானம், ராணுவம் மற்றும் கப்பல்படையுடன் இணைப்பதில் பங்கு வகிக்கிறது.
இறக்குமதி தீவிரவாதிகள்
பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகளை மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் இருந்தும் தீவிரவாதிகளை இறக்குமதி செய்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தூண்டிவருகிறது இந்த அமைப்பு.
தாக்குதல் மோசமாக இருக்கும்
பாகிஸ்தான் ராணுவத்திற்காவது உயிர் பயம் இருக்கும். ஆனால் ஐடிபி தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு அந்த பயமும் கிடையாது. மேலும், கடவுளுக்காக இந்தியா மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற கொள்கை அவர்களுக்கு உள்ளது. எனவே தாக்குதலின் வேகம் அதிகமாக இருக்கும் ஆபத்து உள்ளது.
அல்கொய்தா
இதனிடையே, அல்கொய்தா தனது கிளையை இந்தியாவில் திறப்பதாக கூறியிருந்த நிலையில், அவர்களையும், இந்தியாவிற்குள் செயல்படும் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளையும் ஒன்றிணைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முயன்று வருகிறது. இந்த தகவல்கள் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால், இந்திய ராணுவமும், உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.