பாகிஸ்தான் பிரதமர், ராணுவம் நடுவே மோதல்? இந்திய தாக்குதல் பற்றி ஆளுக்கொரு கருத்து
டெல்லி: இந்தியா தங்கள் எல்லைக்குள் வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், அது துப்பாக்கி சூடு என்றும் பாகிஸ்தான் ராணுவம் செய்திக்குறிப்பு வெளியிட்ட நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரிப்போ, தாக்குதலுக்காக இந்திய அரசை கண்டித்துள்ளார். பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்குமே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ரன்பீர் சிங் டெல்லியில் பேட்டியளித்ததும், அவசர அவசரமாக மறுத்தது பாகிஸ்தான் ராணுவம். இந்திய எல்லையிலிருந்து அத்துமீறி ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், எல்லை புகுந்து வந்து தாக்குதல் நடத்தவில்லை என்றும் ராணுவம் கூறியது. மேலும் பாகிஸ்தானின் 2 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததாகவும் அது கூறியது.
அதேநேரம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்போ, இந்தியா கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து மறுபக்கம் பேட்டியளித்துவிட்டார். தாக்குதல் நடந்ததை வெளியே சொன்னால் வெட்கக்கேடு என ராணுவம் நினைக்கிறது. தாக்குதலை வெளியே சொல்லி இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திரட்ட நவாஸ் ஷெரிப் முயன்றார்.
ஏனெனில், இந்தியா அறிவித்த பிறகுதான், 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டது. முதலிலேயே அந்த நாட்டு ராணுவம் வாய் திறக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா மீது பழி போட முயலவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் ராணுவம் அந்த சம்பவத்தை மூடி மறைக்கவே முயன்றது. ஆனால் இந்தியா அம்பலப்படுத்தியதை எதிர்பார்க்காத அந்த நாட்டு ராணுவமும், பிரதமரும் ஆளுக்கொரு கருத்தை அவசரமாக சொல்லி மாட்டிக்கொண்டனர்.