டவுன் பஸ் போல.. பயணிகளை நிற்க வைத்து பயணித்த கராச்சி-மெக்கா விமானம்! அதிகாரிகள் விசாரணை
கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமானத்தில் இருக்கைகளுக்கு இடையே 7 பயணிகளை நிற்க வைத்து அழைத்து சென்றது குறித்து அந்நாட்டு விமானத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டின் சர்வதேச விமான நிறுவனத்தின் போயிங் ரக 777 விமானத்தில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி கராச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்துக்கு சென்றது. அந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 409 இருக்கைகள் உள்ளன.
இந்நிலையில் குறிப்பிட்ட அந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பிறகும் அதில் கூடுதலாக 7 பயணிகளை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இது விமான போக்குவரத்து விதிமீறலாகும். இதுகுறித்த விசாரணையில் அந்த 7 பயணிகளும் இருக்கைகளுக்கு இடையே நிற்க வைத்து மெக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டது தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கும் போர்டிங் பாஸ், அந்த 7 பேருக்கும் கையால் எழுதப்பட்டு வழங்கப்பட்டதும், டிராபிக் அதிகாரியிடம் கணினியால் உருவாக்கப்பட்ட பட்டியல் மட்டுமே வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
பொதுவாக விமானப் பயணிகளுக்கு ஆக்ஸிஜன் கருவிகள் அவரவர் இருக்கையில் இருக்கும். இதை பயணிகள் அவசரகாலங்களில் பயன்படுத்திக் கொள்வர். ஆனால் இந்த விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்த பயணிகளுக்கு ஆக்ஸிஜன் கருவி வழங்க முடியாது. இச்செயலானது பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே காட்டுகிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.