தேசிய கொடியேற்ற மோகன் பகவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலக்காடு கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவின் பள்ளியொன்றில் தேசியக் கொடியை ஏற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் எதிர்ப்புக்காட்டி, பள்ளி நிர்வாகத்துக்கு மெமோ அனுப்பி இருந்தார். ஆனால் அதையும் மீறி, மோகன் பகவத் பள்ளியில் தேசிய கொடியை சுதந்திர தினத்தில் ஏற்றினார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இப்போது இடம்மாற்றப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு நகரில் கர்ணகி அம்மன் பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில் பள்ளி நிர்வாகம் இறங்கியது.
ஆனால் மோகன் பகவத் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் எழுந்ததுன. சிலர் போராட்டம் நடத்தவும் முயன்றனர்.
மக்களிடம் எழுந்த எதிர்ப்பைக் கவனித்த பாலக்காடு மாவட்ட கலெக்டர் மேரிகுட்டி, " அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் தேசிய கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது பள்ளியின் ஆசிரியர்களோதான் ஏற்ற முடியும்" என்று குறிப்பாணை அனுப்பினார்.
பள்ளி நிர்வாகம் அதனை பெற்றுக் கொண்டது. ஆனால் கலெக்டரின் உத்தரவை பள்ளி நிர்வாகத்தினர் ஏற்கவில்லை. மோகன் பகவத் வருகை உறுதியானது.
பள்ளிக்கூடத்தை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் நடத்திவருவதால், மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கலெக்டர் உத்தரவை மீறி பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றியதால் சர்ச்சை எழுந்தது. கலெக்டர் மேரிகுட்டி " இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்யும்படி போலீசையும் கேட்டுக் கொள்வோம்" என அறிவித்து பரபரப்பூட்டினார்.
இந்த நிலையில், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி இடமாற்றம் செய்யப்பட்டு , பஞ்சாயத்து இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் மேரிகுட்டி உள்பட 5 அதிகாரிகளை மாற்றியதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.