கட்டிய கணவனைக் கள்ளக்காதலுக்காக கொன்ற ஆசிரியை- ம.பி.யில் கைது!
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர்.
அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவந்த சமீர் பிம்பில் என்பவர் கடந்த 9 ஆம் தேதி தனது வீட்டு குளியறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற பால்கர் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இயற்கை மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுவதாக ஆசிரியரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதேபோல் சமீரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெறிபட்டு இறந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சமீரின் மனைவி சமீடா மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவரும் அவரது நடவடிக்கைகளை வேவு பார்த்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, அவருக்கும் அதே பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்திவரும் சந்தோஷ் யாதவ் ஷன்கே என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இந்த தகாத உறவை அவரது கணவர் சமீர் பலமுறை தட்டிக்கேட்டு வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையில் நீண்ட காலமாக சண்டை, சச்சரவு நிலவி வந்துள்ளது. தனது சந்தோஷத்துக்கு தடைக்கல்லாய் இருந்த கணவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த சமீடா கள்ளக்காதலன் சந்தோஷுடன் சேர்ந்து கடந்த 9 ஆம் தேதி சமீரின் கழுத்தை நெறித்து கொன்றார்.
பின்னர், குளிக்கும்போது மயங்கி விழுந்து இறந்ததுபோல் உறவினர்களையும், போலீசாரையும் நம்பவைக்க பிரேதத்தை இழுத்துச் சென்று குளியலறைக்குள் போட்டு கதவை மூடிய சமீடா இதுதொடர்பாக போலீசாருக்கு புகாரும் அளித்துள்ளார். மேற்கண்ட உண்மைகள் விசாரணையின்போது தெரிய வந்ததும் குற்றவாளிகள் சமீடா மற்றும் சந்தோஷை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.