உ.பி.,யில் பூனை என நினைத்து சிறுத்தை வாலைப் பிடித்து இழுத்த விபரீதம்
உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தின் பரிதாபத் அருகே உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் ஒரு வீட்டில் புகுந்த சிறுத்தையை, பூனை என நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்த கிராமவாசி உயிர் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பிலால் நகரில் வளையல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் வசீம் அகமது. இவர் நேற்று இரவு தனது வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் விளக்கை ஏற்றினார்.
விளக்கின் ஒளியில் அறையின் மூலையில் நீண்ட வாலுடன் ஏதோ அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதை பூனை என நினைத்து அவர் அதன் வாலை பிடித்து அசைத்து வெளியே போகும்படி விரட்டியுள்ளார். இதனால், சினம் கொண்ட சிறுத்தை வசீமை நோக்கி கர்ஜித்தது. உடனே வசீம் அந்த அறையை சாத்திவிட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உபி மாநில வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை மீது மயக்க ஊசி போட்டு அதனை அங்கிருந்து மீட்டுச் சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீரட் நகரில் புகுந்த ஒரு சிறுத்தை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட ஆறு பேரை தாக்கியது. அப்போது தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய மாவட்ட நிர்வாகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.