பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 16-ம் தேதி ஆரம்பம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3-வது அல்லது 4-வது வாரத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 13-ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது, நவம்பர் 16-ந் தேதி கூட்டத்தொடரை தொடங்கி, டிசம்பர் 16-ல் முடிக்க முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், '16-வது மக்களவையின் 10-வது அமர்வு நவம்பர் 16-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அரசின் அலுவல்களுக்கு உட்பட்டு இந்த அமர்வு டிசம்பர் 16-ந் தேதி நிறைவு பெற வாய்ப்பு உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இதைப்போன்ற ஒரு அறிவிப்பை மாநிலங்களவை செயலாளரும் வெளியிட்டு உள்ளார்.
ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் யூரி ராணுவ முகாம் தாக்குதல், ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'சர்ஜிக்கல்' நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என தெரிகிறது. மேலும் மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொடர்பான மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.