இந்திய கடற்படையின் அதிநவீன உளவு நெட்வொர்க்
டெல்லி: கடல் பகுதியை கண்காணிக்க புதிய கடற்படை உளவு நெட்வொர்க்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகர் ஞாயிற்றுக்கிழமை துவங்கி வைத்தார்.
கடல் பகுதியை தீவிரமாக கண்காணிக்க புதிய உளவு நெட்வொர்க்கான இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட் அன்ட் அனாலிஸிஸ் சென்டர்(ஐஎம்ஏசி) அதாவது தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிகர் ஞாயிற்றுக்கிழமை துவங்கி வைத்தார். குர்காவ்னில் அமைந்துள்ள இந்த மையம் கடற்படை மற்றும் கடலோர காவல்படையால் கூட்டாக இயக்கப்படும்.
ஐ.எம்.ஏ.சி. மையம் நேஷனல் கமாண்ட் கன்ட்ரோல் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் இன்டெலிஜென்ஸ் நெட்வொர்க்கின் (என்.சி.3ஐ நெர்வொர்க்) நோடல் மையமாகும்.
இந்த மையம் மூலம் மும்பையில் நடந்த 26/11 தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடல் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த ஐ.எம்.ஏ.சி. மையம் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.ஏ.சி. பற்றி பாரிகர் கூறுகையில்,
கண்காணிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த மையம் அமைத்துள்ளது மும்பை தாக்குதலுக்கு இந்தியா அளித்து துணிச்சலான பதில். நமது கடல் பகுதியில் தினமும் 2 முதல் 3 லட்சம் மீன்பிடி படகுகள் இயங்குவதால் கண்காணிப்பது எளிதான விஷயம் அல்ல. இந்த கண்காணிப்பு திட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பு தேவை. இந்திய பெருங்கடலில் அண்டை நாடுகளின் கடற்படை நடவடிக்கைகளை இந்திய கடற்படை கண்காணிக்க வேண்டும்.
நம் எதிரிகள் நம்மை கெட்ட எண்ணத்தில் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் நாம் கண்காணிக்க வேண்டும் என்றார்.
என்.சி.3ஐ நெர்வொர்க் கடலோரப் பகுதிகள் மற்றும் தீவு பிரதேசங்களில் உள்ள 51 கடற்படை மற்றும் கடலோர காவல்படை நிலையங்களுடன் தொடர்புடையது. இந்த நெட்வொர்க் கடற்படையின் கடலோர ராடார் செயின், தானியங்கி கண்காணிப்பு சிஸ்டம்கள், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கேமராக்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பெரும் தகவல்களை 51 நிலையங்களுக்கும் அனுப்பும்.
ஐ.எம்.ஏ.சி. மையத்தில் பலதரப்பட்ட சென்சார்கள் மற்றும் டேட்டாபேஸ்களில் இருந்து பெறப்படும் தகவல்களை மதிப்பிட்டு பல்வேறு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.
என்.சி.3ஐ நெட்வொர்க் பெங்களூரை மையமாகக் கொண்ட பி.இ.எல். நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது முழுமையாக செயல்படுகிறது.
என்.சி.3ஐ நெர்வொர்க் மற்றும் ஐஎம்ஏசி ஆகியவை என்.எம்.டி.ஏ. எனப்படும் நேஷனல் மாரிடைம் டொமைன் அவேர்னஸ்(தேசிய கடல்சார் இணைய விழிப்புணர்வு) திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்.எம்.டி.ஏ. திட்டத்தில் தொடர்புக்கு முதுகெலும்பு போல் என்.சி.3ஐ நெர்வொர்க்கும், ஐ.எம்.ஏ.சி. நோடல் மையமாகவும் செயல்படும். வரும் காலத்தில் ஐ.எம்.ஏ.சி. மையம் என்.எம்.டி.ஏ. மையம் என்று பெயர் மாற்றப்படும்.