சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ரொக்கமாக மட்டும் ரூ.2,100 கோடி நன்கொடை
டெல்லி: 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடந்த மாநில சட்டசபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் ரூ. 2 ஆயிரத்து 100 கோடி நன்கொடை வசூலித்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்து டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டசபை தேர்தல்கள்
2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடந்த அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களின்போது பல்வேறு அரசியல் கட்சிகள் ரொக்கமாக மட்டும் ரூ.2 ஆயிரத்து 100 கோடி வசூல் செய்துள்ளன.
லோக்சபா தேர்தல்
2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடந்த லோக்சபா தேர்தல்களின்போது ரூ.1,000 கோடி ரொக்கம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 3 முறை லோக்சபா தேர்தல் நடந்துள்ளது.
காசோலைகள்
2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல்களின்போது அதிகபட்சமாக காசோலைகள் மூலம் ரூ.1,300 கோடி நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் மாநில சட்டசபை தேர்தல்களின்போது காசோலை மூலம் ரூ.1,244.86 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக
மக்களவை தேர்தலின்போது சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட மாநில கட்சிகள் வசூலித்த மொத்த நன்கொடை ரூ.267.14 கோடி. இதில் அதிகபட்சமாக சமாஜ்வாடி கட்சி ரூ.118 கோடி வசூலித்து ரூ.90.09 கோடி செலவு செய்துள்ளது. இதில் ஆம் ஆத்மி 2-வது இடத்தில் உள்ளது. இக்கட்சி ரூ.51.83 கோடி வசூலித்துள்ளது. அதிமுக ரூ.37.66 கோடி வசூலித்து 3-வது இடத்தில் உள்ளது.
சமாஜ்வாடி கட்சி
சட்டசபை தேர்தலுக்காக உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி ரூ.186.8 கோடி வசூலித்து, ரூ.96.54 கோடி செலவழித்துள்ளது. இதுவரை 2 சட்டசபை தேர்தல்களை மட்டுமே சந்தித்த ஆம் ஆத்மி ரூ.38.54 கோடி வசூலித்து ரூ.22.66 கோடி செலவழித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த விபரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.