கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவர்கள் அறிவிப்பு
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனை அறிவித்துள்ளது.
பெங்களூரு: மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியான பர்வதம்மா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னட திரையுலகில் முன்னிலையில் இருக்கும் திரைப்படத் தயாரிப்பாளரான பர்வதம்மாவின் வயது 77. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன், அவரது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வேகமாக வதந்திகள் பரவின. தனது தாய் நன்றாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகனும் நடிகருமான சிவராஜ்குமார் வேண்டுகோள்விடுத்தார்.
உணர்வுடன்..
இந்நிலையில், பர்வதம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பர்வதம்மா உணர்வு நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்றம்
மேலும், பர்வதம்மா கண் திறந்து பார்ப்பதாகவும், கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர், அவரது சிறுநீரில் அதிகமாக இருந்த உப்பின் அளவு குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர் இன்னும் வெண்டிலேஷன் கருவியின் உதவி கொண்டு சுவாசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் குழு
எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில், சஞ்சய் குல்கர்னி, ரத்னா, நளினி கிளாரா, மகேஷ், கார்த்திக் ஆகியோர் கொண்ட மருத்துவர்கள் குழு பர்வதம்மா உடல்நிலையை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார் பர்வதம்மா.
போலீஸ் பாதுகாப்பு
பர்வதம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைப் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.