பா.ஜ.க.வின் 'குஜராத் மாடல்' தோல்வி- அம்பலப்படுத்துகிறது படேல் சமூக எழுச்சி: சாடும் யெச்சூரி!
அகமதாபாத்: வளர்ச்சிக்கான அடையாளமாக சொல்லப்பட்ட 'குஜராத் மாடல்' தோல்வி அடைந்துவிட்டது என்பதை படேல் சமூகத்தின் எழுச்சி அம்பலப்படுத்திவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
ஹைதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றில் நேற்று கலந்து கொண்ட சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் வளர்ச்சி மாதிரியின் தோல்வியே தற்போதைய படேல்களின் எழுச்சிக்குக் காரணம். கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதார பிரச்சினைகள் எழுந்ததால்தான் இடஒதுக்கீட்டு ஆர்பாட்டங்கள் உருவாகின்றன.
குஜராத் படேல்கள் ஓரளவுக்கு நல்ல நிலைமையில் உள்ள சமூகமே. அவர்களிடத்திலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றால் குஜராத் வளர்ச்சி மாதிரி அனைவருக்குமானது அல்ல என்பது நிரூபணமாகிறது. பெரும்பான்மை வகுப்பினருக்குக் கூட அது பயனளிப்பதில்லை என்பதே இதன் மூலம் தெரிகிறது.
படேல்கள் எழுச்சி குறித்தும், அதன் தொடர்பான வன்முறைகள் குறித்தும் பிரச்சினையின் மையத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளாத பிரதமரின் அமைதி காக்கும் அறைகூவல் ஒருபோதும் செல்லுபடியாகப் போவதில்லை.
ஜாட் சமூகத்தினரும் இதே கோரிக்கையை முன்வைத்து ஆர்பாட்டத்தில் குதித்தனர். இவையெல்லாமே நாட்டு மக்களின் நலம் எவ்வாறு உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. இந்த மோசமான நிலைமைகளுக்கு அரசின் கொள்கைகளே காரணம்.
பிற சமூகங்களில் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களையும் உள்ளடக்கிய இட ஒதுக்கீடு முறை இருந்திருந்தால் படேல்கள் மூலம் இப்போதைய அமைதியின்மை உருவாகியிருக்காது.
இவ்வாறு யெச்சூரில் பேசினார்.